திங்கள், 4 பிப்ரவரி, 2019

கண்களில் இருக்கும் குறை நீங்கி கண்பார்வை தெளிவு பெற (இடது கண்) பாட வேண்டிய பதிகம்

கண்களில் இருக்கும் குறை நீங்கி கண்பார்வை தெளிவு பெற (இடது கண்) பாட வேண்டிய பதிகம்..

சுந்தரமூர்த்தி நாயனார் 
திருக்கச்சி ஏகம்பம் 
தக்கேசி

1.ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் 
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, 
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

2.உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை, 
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை, 
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற 
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

3.திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை, 
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை, 
வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

4.குண்டலம் திகழ் காது உடையானை, கூற்று உதைத்த கொடுந்தொழிலானை, 
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை, வாள் அரா மதி சேர் சடையானை, 
கெண்டை அம் தடங்கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

5.வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை, 
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை, 
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்று ஏத்தி வழிபடப் பெற்ற 
நல்ல கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

6.திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும் 
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை, 
மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற 
கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

7.விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை, 
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை, 
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கண்ணு மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

8.சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும் சிவன் தன்னை, 
பந்தித்த(வ்) வினைப்பற்று அறுப்பானை, பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை, 
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற 
கந்த வார்சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

9.வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர் தம் வாலிய(ப்) புரம் மூன்று எரித்தானை, 
நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி நிலந்தரம் செய்த நிட்கண்டனை, 
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற 
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

10.எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல் 
உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு, 
வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட 
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

11.பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, “பெரிய எம்பெருமான்” என்று எப்போதும் 
கற்றவர் பரவப்படுவானை, “காணக் கண் அடியேன் பெற்றது” என்று 
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன் 
நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...