வழக்குகளில் வெற்றி பெற பாட வேண்டிய பதிகம்
திருப்புறம்பயம்
இறைவன் : சாட்சிநாதர்
இறைவி : கரும்படுசொல்லி
குறிப்பு :
(இத்தல இறைவன் கன்னி பெண் ஒருத்தி தனக்கென்று உறுதி செய்ய பட்ட கணவருடன் இவ்வூருக்கு வந்தாள் . அவள் கணவன் திருமணத்திற்கு முந்தைய நாள் அரவம் தீண்டி இறந்தான்.இவ்வூருக்கு அந்த சமயம் வந்த சம்பந்த பெருமானோ பதிகம் பாடி இறந்த அவனை எழுப்பி,அந்த பையனுக்கே திருமணமும் செய்து வைத்தார்.அந்த சமயம் இவ்வூர் இறைவன் மதுரை சென்று, சாட்சி கூறினமையால், சாட்சி நாதர் எனப் பெற்றார்.
அன்பர்கள் தொழில் மற்றும் குடும்பம் என எந்த வழக்கானாலும் சரி, இத்தல இறைவனை நினைத்து இந்த பதிகம் நாளும் ஓதுவதால் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து வளமாக வாழலாம் என்பது திண்ணம்...)
திருச்சிற்றம்பலம்
1.அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த்
தங்கினோமையும், “இன்னது” என்றிலர், ஈசனார்; எழு, நெஞ்சமே!
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி, வானவர்தாம் தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே.
2.பதியும், சுற்றமும், பெற்ற மக்களும், பண்டையார் அலர்; பெண்டிரும்,
நெதியில் இம் மனை வாழும் வாழ்க்கையும், நினைப்பு ஒழி(ம்), மட நெஞ்சமே!
மதியம் சேர் சடைக் கங்கையான் இடம் மகிழும், மல்லிகை, சண்பகம்,
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழப் போதுமே.
3.புறம் திரைந்து, நரம்பு எழுந்து, நரைத்து, நீ உரையால்-தளர்ந்து,
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிதுகாண்; இஃது அறிதியேல்,
திறம்பியாது எழு, நெஞ்சமே! சிறுகாலை நாம் உறு வாணியம்,
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழப் போதுமே.
4.குற்று ஒரு(வ்)வரைக் கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம்
செற்று ஒரு(வ்)வரைச் செய்த தீமைகள், இம்மையே வரும், திண்ணமே;
மற்று ஒரு(வ்)வரைப் பற்று இலேன்; மறவாது எழு(ம்), மட நெஞ்சமே!
புற்று அர(வ்)வு உடைப் பெற்றம் ஏறி புறம்பயம் தொழப் போதுமே
5.கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி
தெள்ளிதா எழு, நெஞ்சமே! செங்கண் சே உடைச் சிவலோகன் ஊர்
துள்ளி வெள் இள வாளை பாய் வயல்-தோன்று தாமரைப் பூக்கள் மேல்,
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் தொழப் போதுமே.
6.படை எலாம் பகடு ஆர ஆளிலும், பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும்,
கடை எலாம் பினைத் தேரைவால்; கவலாது எழு(ம்), மட நெஞ்சமே!
மடை எலாம் கழுநீர் மலர்ந்து, மருங்குஎலாம் கரும்பு ஆட, தேன்
புடை எலாம் மணம் நாறு சோலைப் புறம்பயம் தொழப் போதுமே.
7.முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும் ஆதலின் முன்னமே,
என்னை நீ தியக்காது எழு(ம்), மட நெஞ்சமே! எந்தை தந்தை ஊர்
அன்னச்சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணி பொழில்,
புன்னைக் கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழப் போதுமே.
8.மலம் எலாம் அறும், இம்மையே; மறுமைக்கும் வல்வினை சார்கிலா;
சலம் எலாம் ஒழி, நெஞ்சமே! எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர்
கலம் எலாம் கடல் மண்டு, காவிரி நங்கை ஆடிய, கங்கை நீர்
புலம் எலாம் மண்டிப் பொன் விளைக்கும் புறம்பயம் தொழப் போதுமே.
9.பண்டு அரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
கண்டு அரீயன கேட்டியேல், கவலாது எழு(ம்), மட நெஞ்சமே!
தொண்டு அரீயன பாடித் துள்ளி நின்று, ஆடி வானவர்தாம் தொழும்
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழப் போதுமே.
10.துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை
அஞ்சி, ஊரன் திருப் புறம்பயத்து அப்பனைத் தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே, “புறம்பயம் தொழுது உய்தும்” என்று நினைத்தன
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர், வல்லர், வான் உலகு ஆளவே.
திருச்சிற்றம்பலம்