திங்கள், 28 மார்ச், 2022

அனைவருக்கும் இந்த வருடத்தின் முதல் ஸ்பெஷல் கிப்ட் பதிகம்

 

இந்த வருடம் மட்டும் அல்ல இனி வர போகும் எல்லா வருடம்களும் சிறக்க நம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய சகல செல்வ யோகம் கிட்டும் பதிகம் 

(அனைவருக்கும் இந்த வருடத்தின் முதல் ஸ்பெஷல் கிப்ட் பதிகம்...)

இறைவன் : காயாரோகணேஸ்வரர்

இறைவி : நீலாயதாட்சி


குறிப்பு : (சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவை வழங்கிய தலம்; இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில் குதிரைவாகன விழா, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.)

     

திருநாகைக்காரோணம்
கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம் 

 

 

1.பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்;
செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்;
முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
 
2.வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி  புக்கு அங்கு இருந்தீர்;
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் பகட்ட நான் ஒட்டுவனோ? பல காலும் உழன்றேன்;
சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர்  நீரே;
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
 
3.பூண்டது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி, பொல்லாத வேடம் கொண்டு, எல்லாரும் காணப்
பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்; பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்;
வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால், வெற்பு அரையன் மடப்பாவை  பொறுக்குமோ? சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் கடல் நாகைக்காரோணம் மேவி  இருந்தீரே! .

4.விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக, வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை உகந்தீர்;
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச் சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே?
வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் மா தவமோ? மாதிமையோ? வாட்டம் எலாம் தீரக்
கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

 
5.மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து, வினைக்கேடு பல பேசி, வேண்டியவா  திரிவீர்;
தொண்டாடித் திரிவேனைத் தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே! கந்தம் முதல் ஆடை  ஆபரணம்
பண்டாரத்தே எனக்குப் பணித்து அருள வேண்டும்; பண்டு தான் பிரமாணம் ஒன்று  உண்டே? நும்மைக்
கண்டார்க்கும் காண்பு அரிது ஆய்க் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
 
6.இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம்  போது,
பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ?
உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட உண்டு அருளிச் செய்தது, உமக்கு  இருக்க ஒண்ணாது இடவே;
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக் கடல் நாகைக்காரோணம் மேவி   இருந்தீரே! .
 
7.தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து,
தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து, திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்;
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த, நிறை மறையோர் உறை வீழிமிழலை தனில் நித்தல்
காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி  இருந்தீரே! .

 
8.மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்; “வாழ்விப்பன்” என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு;
ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்; அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம் அதனில்-
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்; தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்;
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி  இருந்தீரே! .
 
9.மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி; மலை அரையன் பொன் பாவை, சிறுவனையும், தேறேன்;
எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்; எம்பெருமான்! இது தகவோ? இயம்பி அருள் செய்வீர்!
திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில், திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்; நாளை,
“கண்ணறையன், கொடும்பாடன்” என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
 
10.மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்; “மா நிதியம் தருவன்” என்று வல்லீராய் ஆண்டீர்;
கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்! கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை  உண்டேல்,
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து  அருள வேண்டும்;
கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
 
11.“பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே! மற்று ஆரை உடையேன்?
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண்   பட்டும், பூவும்,
கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்!”                                                                                                  என்று
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவை வல்லார் அமருலகு ஆள்பவரே .
திருச்சிற்றம்பலம் 
 

ஞாயிறு, 27 மார்ச், 2022

வெற்றிகரமாக "11 வருடம் முடிவடைந்து 12" வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் நம் தளம்

வெற்றிகரமாக  "11 வருடம் முடிவடைந்து 12 வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் நம் தளம்"



அபிராமி அம்மன் அமிர்தகடேஸ்வரர் திருவருளால் நம்  தளம் வெற்றிகரமாக 11 வருடங்கள் முடிந்து 12 வைத்து வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் நம் தளத்திற்கு வந்து அபிராமி அந்தாதி,பதிகம், திருப்புகழ்  அனைத்தையும் படித்து இறையருளின் திருவருளைப் பெற்று மென்மேலும் நம் தளம் சிறக்க அனைத்து அடியவர்களையும் வேண்டிக்கொள்கிறேன்...

நன்றி 

என்றும் அடியார்  பெருமக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற எண்ணத்துடன் ,

சிவ.பாகம்பிரியாள் 

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...