திங்கள், 26 நவம்பர், 2018

நல்ல நட்பு,உண்மை சிவனடியார்களின் நட்பு கிடைக்க பாட வேண்டிய பதிகம்

 சுந்தரர் தேவாரம் 
திருச்சிற்றம்பலம் 
திருஆலங்காடு
பழம்பஞ்சுரம்
1முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா!
சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே!
பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய
அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
  
2பொய்யே செய்து புறம் புறமே திரிவேன் தன்னைப் போகாமே,
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே!
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா! பழையனூர் மேய
ஐயா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

  
3தூண்டா விளக்கின் நற்சோதீ! தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்!
பூண்டாய், எலும்பை! புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே!
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய
ஆண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
  
4மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு, மதி மயங்கி,
அறிவே அழிந்தேன், ஐயா, நான்! மை ஆர் கண்டம் உடையானே!
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய
அறிவே! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
  
5வேல் அங்கு ஆடு தடங்கண்ணார் வளையுள் பட்டு, உன் நெறி மறந்து,
மால் அங்கு ஆடி, மறந்தொழிந்தேன்; மணியே! முத்தே! மரகதமே!
பால் அங்கு ஆடீ! நெய் ஆடீ! படர் புன்சடையாய்! பழையனூர்
ஆலங்காடா! உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே.
  
6எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய்! எந்தை பெருமானே!
கண் ஆய் உலகம் காக்கின்ற கருத்தா! திருத்தல் ஆகாதாய்!
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
  
7வண்டு ஆர் குழலி உமை நங்கை பங்கா! கங்கை மணவாளா!
விண்டார் புரங்கள் எரி செய்த விடையாய்! வேத நெறியானே!
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா! பழையனூர் மேய
அண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
  
8பேழ்வாய் அரவின் அணையானும், பெரிய மலர் மேல் உறைவானும்
தாழாது, உன் தன் சரண் பணிய, தழல் ஆய் நின்ற தத்துவனே!
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் தன்னை
ஆள்வாய்! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
  
9எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ் படிகால் எமை ஆண்ட
பெம்மான்! ஈமப் புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே!
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
  
10பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன், பழையனூர் மேய
அத்தன், ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பு ஆகிச்
சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்-
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே.
திருச்சிற்றம்பலம்
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...