விவசாயம் பெருகவும், நிலத்தில் விளைச்சலை பெருக்கவும் பாட வேண்டிய பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்
குறிப்பு:(சம்பந்தர் பதிகம் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான பெரும்பதி.)
திருச்சிற்றம்பலம்
திருஓத்தூர் - பழந்தக்கராகம்
1.பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர்! உம குணங்களே.
2.இடை ஈர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே! புள்ளிமான் உரி
உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்
சடையீரே! உம தாளே.
3.உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்!
ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க்
கள்வீரே! உம காதலே!
4.தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே! அடியார் வினை
ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே! அருள் நல்குமே!
5.குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை
உழை ஆள்வீர்! திரு ஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
அழையாமே அருள் நல்குமே!
6.மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ? திரு ஓத்தூர்
நக்கீரே! அருள் நல்குமே!
7.“தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை
நாதா!” என்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர்
ஆதீரே! அருள் நல்குமே!
8.“என்தான் இம் மலை!” என்ற அரக்கனை
வென்றார் போலும், விரலினால்;
“ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்”
என்றார் மேல் வினை ஏகுமே.
9.நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச்
சென்றார் போலும், திசை எலாம்
ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர்
நின்றீரே! உமை நேடியே!
10.கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர்
தேரர், சொல் அவை தேறன் மின்!
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீரவன், கழல் சேர்மினே!
11.குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை,
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக