செவ்வாய், 23 ஜூலை, 2019

பசிப்பிணி தீரவும்,என்றும் உணவு குறைவின்றி கிடைக்கவும் பாட வேண்டிய பதிகம்

பசிப்பிணி தீரவும்,என்றும் உணவு குறைவின்றி கிடைக்கவும் பாட வேண்டிய பதிகம் 

சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய பதிகம் 

திருச் சோற்றுத்துறை 

குறிப்பு:(தலச் சிறப்பு: இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.)

திருச்சிற்றம்பலம் 

1.அழல் நீர் ஒழுகியனைய சடையும், 
உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்- 
கழை நீர் முத்தும் ககைக்குவையும் 
சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.
 
2.பண்டை வினைகள் பறிய நின்ற 
அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்- 
இண்டை கொண்டு அன்பு இடை அறாத 
தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே.
 
3.கோல அரவும், கொக்கின் இறகும், 
மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்- 
ஆலும் மயிலும், ஆடல் அளியும், 
சோலை தரு நீர்-சோற்றுத்துறையே.
 
4.பளிக்குத்தாரை பவளவெற்பில் 
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்- 
அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும் 
துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே.

5.உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு 
வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்- 
திதையும் தாதும் தேனும் ஞிமிறும் 
துதையும் பொன்னி-சோற்றுத்துறையே.
 
6.ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட 
பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்- 
சீதப்புனல் உண்டு எரியைக் காலும் 
சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே.
 
7.இறந்தார் என்பும், எருக்கும், சூடிப் 
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்- 
சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன 
துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே.
 
8.காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த 
ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்- 
தேமென்குழலார் சேக்கை புகைத்த 
தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே.
 
9.இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு 
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்- 
தலையால்-தாழும் தவத்தோர்க்கு என்றும் 
தொலையாச் செல்வ-சோற்றுத்துறையே.
 
10.சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள் 
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து 
அற்றார் அடியார் அடி நாய் ஊரன் 
சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே.

திருச்சிற்றம்பலம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...