வாழ்க்கையில் கேடில்லாத வாழ்வை பெற்று நிம்மதியாக வாழ பாட வேண்டிய பதிகம்
திருக்கீழ்வேளூர்(அப்பர் பெருமான் அருளியது)
இறைவன் :கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி
இறைவி:வனமூலையம்மன், சுந்தரகுஜாம்பிகை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
1 ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை,
ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை,
சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ
வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை,
கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
2. சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கி,
தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை;
நல் பான்மை அறியாத நாயினேனை நன்நெறிக்கே
செலும் வண்ணம் நல்கினானை;
பல்பாவும் வாய் ஆரப் பாடி, ஆடி, பணிந்து,
எழுந்து, குறைந்து, அடைந்தார் பாவம் போக்க-
கிற்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;
கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
3. அளை வாயில் அரவு அசைத்த அழகன் தன்னை,
ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை,
வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை, அல்லாதார்க்கு உளையாதானை,
உலப்பு இலியை, உள் புக்கு என் மனத்து மாசு
கிளைவானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
4. தாள் பாவு கமல மலர் தயங்குவானைத் தலை
அறுத்து மா விரதம் தரித்தான் தன்னை,
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை,
கொடுவினையேன் கொடு நரகக்குழியில் நின்றால்
மீட்பானை, வித்துருவின் கொத்து ஒப்பானை,
வேதியனை, வேதத்தின் பொருள் கொள் வீணை
கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
5. நல்லானை, நரை விடை ஒன்று ஊர்தியானை, நால்
வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டாச்
சொல்லானை, சுடர் மூன்றும் ஆனான் தன்னை,
தொண்டு ஆகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை,
வில்லானை, மெல்லியல் ஓர் பங்கன் தன்னை,
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க-
கில்லானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
6. சுழித்தானை, கங்கை; மலர் வன்னி, கொன்றை, தூ
மத்தம், வாள் அரவம், சூடினானை;
அழித்தானை, அரணங்கள் மூன்றும் வேவ;
ஆலால-நஞ்சு அதனை உண்டான் தன்னை;
விழித்தானை, காமன் உடல் பொடி ஆய் வீழ;
மெல்லியல் ஓர் பங்கனை; முன் வேல் நல் ஆனை
கிழித்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;
கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
7. உளர் ஒளியை, உள்ளத்தினுள்ளே நின்ற
ஓங்காரத்து உள்பொருள் தான் ஆயினானை,
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும்
ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை,
வளர் ஒளியை, மரகதத்தின் உருவினானை,
வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளர் ஒளியை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
8. தடுத்தானை, காலனைக் காலால் பொன்ற; தன்
அடைந்த மாணிக்கு அன்று அருள் செய்தானை;
உடுத்தானை, புலி அதளோடு அக்கும் பாம்பும்;
உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை;
மடுத்தானை, அரு நஞ்சம் மிடற்றுள்-தங்க;
வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி
கெடுத்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;
கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
9. மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை,
மயானத்தில் கூத்தனை, வாள் அரவோடு என்பு
பூண்டானை, புறங்காட்டில் ஆடலானை, போகாது
என் உள் புகுந்து இடம் கொண்டு என்னை
ஆண்டானை, அறிவு அரிய சிந்தையானை,
அசங்கையனை, அமரர்கள் தம் சங்கை எல்லாம்
கீண்டானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
10. முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான் தானும்
முதுகு இற, முன்கைந் நரம்பை எடுத்துப் பாட,
பறிப்பான் கைச் சிற்றரிவாள் நீட்டினானை;
பாவியேன் நெஞ்சு அகத்தே பாதப் போது
பொறித்தானை; புரம் மூன்றும் எரி செய்தானை;
பொய்யர்களைப் பொய் செய்து போது போக்கிக்
கிறிப்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;
கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக