தோல் வியாதிகள் மற்றும் வெண்படை போன்ற தோல் நோய்கள் நீங்க பாட வேண்டிய பதிகம்
திருநறையூர்ச்சித்தீச்சரம்
இறைவர் : சித்தநாதேசுவரர், வேதேசுவரர், நரேசுவரர்
இறைவியார் : அழகம்மை, சௌந்தர நாயகி
குறிப்பு : (கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.)
திருஞானசம்பந்தர் அருளிய 3- ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1.ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!
2.காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ,
வீடும் ஆக மறையோர் நறையூரில்,
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!
3.கல்வியாளர், கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்,
மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில்
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!
4.நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும், நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!
5.உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,
நண்பு உலாவும் மறையோர், நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!
6.கூர் உலாவு படையான், விடை ஏறி,
போர் உலாவு மழுவான், அனல் ஆடி,
பேர் உலாவு பெருமான், நறையூரில்
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.
7.அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர்,
மன்றில் வாச மணம் ஆர், நறையூரில்
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!
8.அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்
திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!
9.ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து, மேல்
சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர்
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!
10.மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!
உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.
11.மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட, பறையும், பாவமே.
திருச்சிற்றம்பலம்
குறிப்பு : (மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக