பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்து வாழ பாட வேண்டிய பதிகம்...
கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் கணவன் மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. திருவாஞ்சியத்தை காசியை விடப் பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் என குறிப்பிடத்தக்கதாக கூறப்படுகிறது.
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7- ம் திருமுறை
திருவாஞ்சியம்
இறைவர் திருப்பெயர்: ஸ்ரீவாஞ்சியநாதர்.
இறைவியார் திருப்பெயர்: வாழவந்தநாயகி, மங்களநாயகி
திருச்சிற்றம்பலம்
1.பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு
மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.
2.தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க,
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.
3.தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு நுனைப் பகழி அது ஒன்றால்,
பார்த்தனார் திரள் தோள் மேல் பல்-நுனைப் பகழிகள் பாய்ச்சி,
தீர்த்தம் ஆம் மலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்
சாத்து மா மணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.
4.சள்ளை வெள்ளை அம் குருகுதான் அது ஆம் எனக் கருதி,
வள்ளை வெண் மலர் அஞ்சி, மறுகி, ஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர், தாமே.
5.மை கொள் கண்டர், எண்தோளர், மலை மகள் உடன் உறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்,
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்,
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே?
6.கரந்தை கூவிள மாலை கடி மலர்க் கொன்றையும் சூடி,
பரந்த பாரிடம் சூழ, வருவர், எம் பரமர், தம் பரிசால்;
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
மருந்தனார், அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.
7.அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார்,
குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின்
பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.
8.களங்கள் ஆர் தரு கழனி அளி தரக் களி தரு வண்டு
உளங்கள் ஆர் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி,
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில், வாஞ்சியத்து அடிகள்
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.
9.வாழை இன் கனி தானும், மது விம்மி, வருக்கை இன் சுளையும்,
கூழை வானரம் தம்மில், “கூறு இது சிறிது” எனக் குழறி,
தாழை வாழை அம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்,
ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே.
10.செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்
பொன் அலங்கல் நல் மாடப் பொழில் அணி நாவல் ஆரூரன்
பன் அலங்கல் நல் மாலை பாடுமின், பத்தர் உளீரே!
திருச்சிற்றம்பலம்
குறிப்பு : (தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது.
இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது.
மூவராலும் பாடல் பாடப்பட்ட சிறப்பு பெற்ற தலம்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன
மேலும் பல சிறப்புகளையுடைய இத்தலம் திருக்கடவூருக்கு அடுத்தபடி நிகரற்ற தலமாகும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக